பெண்கள் விரும்பிச் சூடும் பூ மல்லிகை. அதேநேரம் மல்லிகைப் பூ, மருத்துவ குணங்களும் நிறைந்தது என்று பலருக்குத் தெரியாது.
இந்தப் பூவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பல ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.
மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதைச் சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி, காலை- மாலை என இருவேளை அருந்தி வரலாம். இதனால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். அவ்வப்போது ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.
மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தி வந்தால், வயிற்று வலி மற்றும் அஜீரணம் நீங்கும்.
மல்லிகைப் பூவை தேனில் கலந்து சாப்பிடுவது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் என்று கூறப்படுகிறது.
மல்லிகைப் பூ, பெண்களின் கருப்பை பிரச்சனைகளை சரிசெய்யவும், கருப்பையை வலுப்படுத்தவும் உதவும்.
மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
உடலில் மல்லிகைப் பூ எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்யலாம். இதனால் உடல்வலி நீங்குவதோடு, குளிர்ச்சியும் அடையும்.
மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை தலையில் சூடிவந்தால், மன அழுத்தம் குறையும், உடல் சூடும் மாறும்.