சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏப்ரல் முதல் வாரத்தில் AC ரெயில் - ஆனால் ஒரு TWIST
சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரெயில்கள் போல முழுவதும் குளு, குளு வசதிகள் கொண்ட ஏ.சி. புறநகர் ரெயில் இயக்கப்பட உள்ளது.
தானாக திறந்து மூடும் கதவு வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த ரெயில் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த ஏ.சி. ரெயில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னக ரெயில்வே அறிவித்து இருக்கிறது.
மற்ற புறநகர் மின்சார ரெயில்கள் போல இல்லாமல் காலை 5.45 முதல் 10.30 வரையிலும், மாலை 3.45 முதல் இரவு 8.30 வரையிலும் இயக்கப்படும்.
இடையில் 5 மணி நேரம் இந்த ரெயிலில் கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் பராமரிப்பு செய்யப்படும்.
ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வசதி, அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா வசதிகளும் உள்ளது.
1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதில் பயணம் செய்ய ரூ.30 முதல் ரூ. 50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.