search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore Government Hospital"

    • கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வசதி, நவீன உபகரணங்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இருதய சிகிச்சை பிரிவு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் செயல்படாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

    திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை சென்னைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி விடுகின்றனர்.

    இன்று காலை ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சைக்கான நவீன எந்திரங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான கேத் லேப் வசதி இல்லை எனக் கூறிய டாக்டர்கள் சரஸ்வதியை சென்னைக்க செல்லுமாறு அறிவுறத்தினர். அவரது குடும்பத்தினர் பயத்துடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இது போல பல சம்பவங்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அரங்கேறி வருகின்றன. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3½ கோடி செலவில் இருதய அறுவை சிகிச்சைக்கான அரங்கு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளையும் மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அதிநவீன வசதி கொண்டு வர வேண்டும். மருத்துவக்கல்லூரியில் 4 துறைகளில் மட்டுமே பட்ட மேற்படிப்பு உள்ளது. அதேபோல் அனைத்து துறைகளிலும் பட்ட மேற்படிப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×