search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjai Periya Kovil"

    • மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை சித்திரை பெருவிழா தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் காலை 7 மணிக்கு வடம் பிடித்து புறப்பட்டது.

    அப்போது புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு தனியார் நிறுவன பெயர் பலகையில் தேரின் அலங்கார பந்தல் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் அதனை சரிசெய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தேர் புறப்பட்டது.

    இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, மீண்டும் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியது. பின்னர் இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.

    ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் வலது புற மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    இருந்தாலும் அலங்கார பந்தலை மின் கம்பத்தில் இருந்து அகற்றி சரி செய்யப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இப்படி 3 முறை மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதற்கு அலங்காரப் பந்தலின் அகலம் வழக்கத்தை விட அதிகம் என்பதே முதன்மை காரணமாக கூறப்பட்டது. இதனால் அலங்கார பந்தலின் அகலத்தை தொழிலாளர்கள் குறைத்தனர். அதன் பின்னர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.

    • அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

    பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.

    இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

     

    தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.

    நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
    • கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

    விழாவின் கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
    • சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் கடைசி நாளான 23-ந் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • கிரீளத்தோடு சிகரம் அமைந்துள்ள 8.7 மீ. சதுரத் தளம் ஒரே கல்லால் ஆனது அல்ல.
    • ஒரே கல்லால் அமையாவிட்டாலும் இச்சிகரமானது வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.

    கிரீளத்தோடு சிகரம் அமைந்துள்ள 8.7 மீ. சதுரத் தளம் ஒரே கல்லால் ஆனது அல்ல.

    இது பிரம்மந்திரக் கல்லும் அல்ல.

    இது 80 டன் எடை உடையது என்பதும், அழகி என்ற கிழவி கொடுத்தது என்ற கதையும் கற்பனையே என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள்.

    ஸ்தூபி வரை மேலே சென்று எல்லாப் பகுதிகளையும் ஆராய்ந்து அளந்த போது இருக்கட்டுமானம் முழுவதும் பல துண்டு கற்களால் ஆனது என்பது உறுதியாகத் தெரிந்தது.

    ஒரே கல்லால் அமையாவிட்டாலும் இச்சிகரமானது வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள நேர்த்தியான படைப்பும்

    உலகக் கட்டிடக்கலை அறிஞர்கள் அனைவரையும் வியக்கும் ஒப்பற்ற படைப்பும் ஆகும் என்பது திண்ணம் என்று

    குடவாயில் பாலசசுப்பிரமணியம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    கிரீவப் பகுதியில் வடமேற்கு மூலையில் 153 மீ. உயரத்தில் நிற்கும் பூதகணம் ஒன்று மிகச்சிறப்பாக வடிக்கப் பெற்று காணப்பெறுகின்றது.

    இப்பூதம் சிரத்தைத் தாங்கி நிற்பது போன்று இருப்பினும், சிரத்திலிருந்து ஒரு துளை இடப்பட்டு அது பூதத்தின் உடல் வரை அமைந்துள்ளது.

    இத் துவாரத்தில் முன்னாளில் மரக்கழியைச் சொருகி ரிஷபக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்.

    வட நாட்டுக் கோவில்களில் கலசத்திற்கு அருகே கொடி பறப்பது போன்று இங்கும் செய்துள்ளனர்.

    கோபுரத்தின் 13 ஆவணங்களிலும் உள்ள சாலைகள், கூடுகள் ஆகியவையும் மையப் பகுதியில் உள்ள தெய்வத் திரு உருவங்களும் அழகாகச் கண்ணச் சுதையால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றன.

    கீழ்த் திசையில் சிவபெருமானும் உமையும் தேவர்களுடன் திகழும் கயிலை காட்சி காட்டப்பட்டுள்ளது.

    பின்னணியில் கயிலைமலை போன்ற காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கோபுரத்தின் உட்கூடு லிங்கத்தின் உச்சியில் இருந்து கலசத்தின் பீடபம் வரை தொடர்கிறது.

    இவ்வமைப்பே தஞ்சைக் கோவிலின் தனிச்சிறப்பாகும்.

    குஞ்சரமல்லனாகிய ராஜராஜப் பெருந்தச்சன் என்பவனின் மகத்தான பெருஞ்சாதனையான இக்கட்டுமானம் வெறும் கட்டிடக் கலையை மட்டும் காட்டவில்லை.

    மாறாக சைவ மெய்ப் பொருளாகிய சிவதத்துவத்தின் வெளிப்பாடே இக்கட்டிட அமைப்பாகும்.

    • தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பழந்தமிழக கட்டிடக்கலை ஆற்றலின் இமயமாக திகழ்கிறது.
    • உட்சுவர்களும், புறச்சுவர்களும், விளங்க கோபுரம் மேல் எழுந்து கம்பீரமாக நிற்கிறது.

    தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பழந்தமிழக கட்டிடக்கலை ஆற்றலின் இமயமாக திகழ்கிறது.

    இந்த கோபுரம் 30.18 மீ சதுர அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனை சுற்றி நான்கு புறமும் வாயில்களுடன் அந்தராளம் எனும் அறையுடன் திகழ்கின்றது.

    ராஜராஜஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுவம் நடுவே திகழ, ஒரே வாயிலும் 11 அடி கனமுடைய சுற்றுச்சுவர்களுடனும் கருவறை உள்ளது.

    கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அந்தாராளம் என்னும் அறை 6 அடி அகலம் உடையதாக விளங்குகின்றது.

    இதற்கு புறச் சுவர்களாக திகழும் 4 சுவர்களின் அகலம் 13 அடி கனமுடையதாகும்.

    இவ்வாறு உட்சுவர்களும், புறச்சுவர்களும், விளங்க கோபுரம் மேல் எழுந்து கம்பீரமாக நிற்கிறது.

    இருபுறச் சுவர்களிலும் இப்போது சோழர் கால ஓவியங்களோடு நாயக்கர் கால ஓவியங்களும் காணப்பெறுகின்றன.

    இரண்டாம் நிலை (மாடியில்) உள்ள சுற்றறையில் சிவபெருமானே நாட்டியம் ஆடுவதாக உள்ள கரணச் சிற்பங்கள் உள்ளன.

    இச்சுற்றறையின் மேல் நிலையில் இருபக்க சுவர்களும் ஒவ்வொரு அடுக்கிலும், ஒவ்வொரு கல்லாக நீண்டு இறுதியாக உட்புற சுவர்களும் வெளிப்புற சுவர்களும் ஒன்றாக இணைந்து 30 அடி கனமுடைய தளத்தினை உருவாக்கி உள்ளன.

    இந்த தளத்தில் இருந்து சதுர வடிவில் பிரமிடு அமைப்பில் குவிந்த வண்ணம் 13 அடுக்குகளில் விமானம் மேல் நோக்கி உயர்ந்து சென்று, கடைசியாக 8.7 மீ. பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்குகின்றது.

    இத்தளத்தின் மேல் நான்கு மூலைகளிலும் 1.34 மீ. உயரமும் 1.40 மீ அகலமும் கொண்டு பக்கத்துக்கு இரண்டு இரண்டாக எட்டு நந்திகள் உள்ளன.

    மையத்தில் 20 மீ. சுற்றளவுள்ள கிரீவம், அதன் மேல் பிரம்மாண்டமான சிகரம் ஆகியவற்றோடு சுமார் 12 அடி உயரமுடைய கலசத்தையும் பெற்று கம்பீரமாகத் திகழ்கிறது.

    இந்த கோபுரம் தரையில் இருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுடையது ஆகும்.

    சிகரத்தின் நான்கு திக்குகளிலும் எழில் கொஞ்சும் கீர்த்தி முகங்கள் உள்ளன.

    மையத்தில் யாளித்தலையும், அதற்கு கீழ் வாள் கேடயம் ஏந்திய பூதகணங்களின் ஓர் அணியும், அதற்கு கீழே அணிவகுத்து நிற்கும் யானைகளும், அனைத்திற்கும் கீழாக யாளிமுக வரிசையும் கொண்டு இந்த கீர்த்தி முகங்கள் அமைந்துள்ளன.

    கிரீவத்தின் நான்கு திசைகளிலும் கீர்த்தி முக அமைப்புக்கு கீழாகப் பத்மாசனத்தில் சிவபெருமான் அமைந்துள்ள சிற்பங்கள் உள்ளன.

    தெற்கு, மேற்கு திசைகளில் அபயம் வரதம் காட்டித் திரிசூலமும், மழுவும் ஏந்திய கரங்களோடு திருவுருவங்கள் உள்ளன.

    வடக்கு திசையில் உள்ள சிற்பத்தில் மழு, திரிசூலம் ஏந்திய நிலையில் அபயம் காட்டி, மாதுளம் கனி ஏந்தியவாறு அமர்ந்துள்ளார்.

    கிழக்கில் உள்ள சிற்பத்தில் மான் மழு ஏந்தியவராக, அபயவரத கரங்களோடு அமர்ந்து அருள்பாலிக்கும் நிலையைக் காண முடிகிறது.

    • இந்த 4 ஆண்டு காலமும் ஒரு கிழவி அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு நீர், மோர் கொடுத்தாள்.
    • சிற்பிகள் உளியால் கையில் அடிபட்டு கொண்டால் கட்டு போட்டு முதல் உதவி செய்வாள்.

    தஞ்சை பெரிய கோவில் கட்டும் பணி 4 ஆண்டு காலம் நடந்தது.

    இந்த 4 ஆண்டு காலமும் ஒரு கிழவி அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு நீர், மோர் கொடுத்தாள்.

    சிற்பிகள் உளியால் கையில் அடிபட்டு கொண்டால் கட்டு போட்டு முதல் உதவி செய்வாள்.

    "இன்றைக்கு வேலை எவ்வளவு தூரம் வந்திருக்கிறது" என்று கேட்டு இன்புறுவாள்.

    அவள் பெயர் அழகம்மை. அவள் கணவன் அவளை "அழகி" என்று கூப்பிட்டு வந்தான்.

    கணவனுக்கு பின்னும் சகவயதுடையவர்கள்.

    ஊர் பெரியவர்கள் அழகி என்றே கூப்பிட்டு வந்ததால் சிறு குழந்தைகள் கூட "அழகிப்பாட்டி" என்றே அழைத்தனர்.

    அதனால் சிற்பக் கலைஞர்களுக்கும் பணியாளர்களுக்கும் கூட அவள் "அழகிப்பாட்டி"யாகவே திகழ்ந்தாள்.

    கல்லை நல்ல படியாய் யாருக்கும் சேதமில்லாமல் ஏற்ற வேண்டுமே என்று மன்னரைப் போலவே அழகிப்பாட்டியும் நெடு நாட்களாய் கவலைப்பட்டாள்.,

    ஏற்றியாற்று என்று தலைமைச் சிற்பி சொன்னதும் அவள் அடைந்த ஆனந்தம் கொஞ்ச நஞ்சமல்ல சுண்டல் செய்து நிவேதனம் செய்தாள்.

    இதைத் தலைமைச் சிற்பி பார்த்தான்.

    தலைமையாற்று இந்தத் தள்ளாத வயதிலும் மற்றவருக்கு உபகாரம் செய்யும் கிழவியின் நினைவாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

    கல்லில் ஒரு அழகிய தாமரை மலரைச் செதுக்கினான்.

    கிழவியிடம் காண்பித்து விட்டு விமானத்தில் பொருத்தி விட்டான்.

    அழகிப் பாட்டிக்கு பெரும் மகிழ்ச்சி, சிற்பியை வாயார வாழ்த்தினாள்.

    கும்பாபிஷேகத்துக்கு இரண்டு நாள் முன்பு "விடங்கரே! நான் அமைத்த ஆலய நிழலில் சுகமாய் இருக்கிறாரா?" என்று மனத்தால் குசலம் விசாரித்துக் கொண்டு வந்தான் ராஜராஜன்.

    அன்றிரவு ராஜராஜன் கனவில் சிவபெருமான் தோன்றி, "அன்பா! மாலையில் நீ கேட்ட வினாவுக்கு இப்போது விடை தருகிறேன்.

    அழகி அமைத்துக் கொடுத்த தாமரை நிழலில் ஆனந்தமாக வீற்றிருக்கிறேன்" என்றார்.

    ராஜராஜன் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

    உடல் தொப்பலாய் வியர்த்திருந்தது. "நான் ராஜாக்களுக்கு ராஜாவாக இருக்கலாம்! ஒரு கணம் அதை மறந்து கர்வப்பட்டேனே" என்று வேதனைப்பட்டான்.

    மறுநாள் காலை வேலை நடக்குமிடம் சென்றான்.

    அழகி யார் என்று விசாரித்துக் கொண்டு அவள் இருப்பிடம் சென்றான். அவளின் சேவையைக் கேட்டு இன்புற்றான்.

    "அம்மையே! இக்கோவிலில் தாமரையால் நீ செய்த பணி என்ன?" என்று அன்புடன் கேட்டான். கிழவி தலைமைச் சிற்பிதன் வீட்டு முன் கிடந்த கல்லில் தாமரைமலர் போல் செய்து விமானத்தில் பொருத்தியதைச் சொன்னாள்.

    பரிசுகளும், மானியமும் கொடுத்து அவளை வணங்கினான்.

    மன்னன் ராஜராஜனின் பணிவைக் கண்டு அழகி பாட்டியும் உருகி மனமார வாழ்த்தினாள்.

    "தாயே! திருவிழாவில் உமையொரு பாகனுக்கு கற்குடை பிடிக்கும் புண்ணியத்தை உன் வாரிசுகளுக்குத் தருகிறேன்" என்று வாக்களித்தான்.

    அது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள குளத்திற்கு அழகிக் குளம் என்று பெயர் சூட்டினான் மன்னன்.

    ராஜராஜனின் பெருந்தன்மைக்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

    தஞ்சை நகராட்சி அலுவலகம் தற்போதும் அழகிக் கிழவியின் வீட்டில் தான் நடைபெறுகிறது.

    • பெரிய கோவில் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜராஜ சோழன்தான்!...
    • ஆனால் எத்தனை பேருக்கு ராஜராஜ பெருந்தச்சனின் பெயர் நினைவுக்கு வரும்?

    வரலாற்று பின்னணியில் நடந்திருக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

    பெரிய கோவில் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜராஜ சோழன்தான்!...

    ஆனால் எத்தனை பேருக்கு ராஜராஜ பெருந்தச்சனின் பெயர் நினைவுக்கு வரும்?... இதோ அந்த சோக வரலாறு...

    தஞ்சை பெரிய கோவிலையும், மிகப்பெரிய தேர் ஒன்றினையும் நிர்மானிக்கும் பொறுப்பினை விஸ்வகர்மா வகுப்பைச் சேர்ந்த பெருந்தச்சன் என்பவனிடம் ஒப்படைத்திருந்தான் சோழ மன்னன் ராஜராஜன்.

    ஆலயப்பணியை முடித்த பெருந்தச்சன் தேர் செய்யும் பணியையும் முடித்தார்.

    அடுத்து?... செய்யப்பட்டிருக்கும் அந்த தேரை மறுநாள் வீதியில் செலுத்தி வெள்ளோட்டம் பார்க்க வேண்டும்.

    மன்னன் தேரில் அமர்ந்து அதை பார்வையிட வேண்டும்.

    எல்லாம் முடிந்து விட்டதா? வெள்ளோட்டப்பணியைத் துவக்கலாமா? என்று கேட்ட மன்னனிடம்,

    மன்னா ஒரு விஷயம், கோவில் பணி, தேர்ப்பணி இரண்டும் முடிவடைந்து விட்டது.

    தேர் வெள்ளோட்டம் இப்போது நடத்தக்கூடாது.

    அப்படி நடந்தால் அது உங்கள் உயிருக்குத்தான் ஆபத்து. வேண்டாம் என்று தடுத்தான் பெருந்தச்சன்.

    மன்னன் யோசனை செய்தான். என் ஆயுளுக்கு ஆபத்தா?

    அதனைத்தவிர்க்க நான் என்ன செய்யவேண்டுமென்று மன்னன் பெருந்தச்சனை கேட்க,

    அதற்கு அவர் நாளைக்கு ஒரு நாள் மட்டும் நான் மன்னனாக பதவி ஏற்க வேண்டும்.

    ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் மகுடத்தை துறக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றார்.

    இந்த வார்த்தைகளைச் கேட்ட ராஜராஜன் அதற்கு சம்மதித்தான்.

    பெருந்தச்சனுக்கு அன்று ஒருநாள் மட்டும் முடிசூட்டி அவனை மன்னன் ஆக்கினான்.

    மறுநாள் தேர் வெள்ளோட்டத்தின் போது.. தேரில் பவனி வந்தான் ராஜராஜ பெருந்தச்சன்! அன்றே!... நிலை தடுமாறி கீழே விழுந்த பெருந்தச்சன் தேர்ச்சக்கரங்களில் சிக்கி உயிரை இழந்தான்.

    ராஜராஜனது உயிரைக்காக்க, தன் உயிரை பலிகொடுத்த பெருந்தச்சன் இறக்கும் தருவாயில் சோழ மன்னனிடம் ஒரு வரத்தைப்பெற்றுக் கொண்டு உயிரை விட்டான்.

    பெரிய கோவிலில் எந்த பூஜை, திருவிழாக்கள் நடந்தாலும் முதலில் தனக்குப்பூஜை செய்து தன்னை வழிபட்ட பின்னர் தான் மற்ற பூஜைகளை செய்ய வேண்டும் என்பதுதான் பெருந்தச்சனின் கோரிக்கை.

    ராஜராஜசோழனும், அவனது பரம்பரையும் இதனை கருத்தில் முன்னிறுத்தி அதன் படியே செய்து வந்தனர்.

    அக்காலத்தில் ஆலயத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் சரி, முதலில் பெருந்தச்சனுக்குப்பூஜை செய்து விட்டுதான் மற்றவை நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

    • ஒரு நாடு செழிக்க வேண்டுமெனில் அந்நாடு போர்க்களமே காணாமல் இருக்க வேண்டும்
    • முடிசூட்டு விழாவின் போது “ராஜராஜ சோழன்” என்ற சிறப்பு பெயரைச் சூடிக்கொண்டான்.

    சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையான் குலத்தை சேர்ந்த வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன் அருண்மொழி என்னும் ராஜராஜன்.

    ஆதித்த கரிகாலன் என்னும் மூத்தோன் கொலையுண்டு இறந்தபிறகு நாட்டு மக்கள் அனைவரும் இளைஞர் அருண்மொழியே முடிசூட ஏற்றவன் என விரும்பினர்.

    அப்போது தனது சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழருக்குத் தானே ஆள வேண்டும் என்ற விருப்பம் இருந்ததை அறிந்த அருண்மொழி அவர் விருப்பப்படியே அவரை அரியணையில் அமரச்செய்தான்.

    அவர் இருந்தவரை ஆட்சியை மனத்தாலும் நினைக்காமல் இருந்தான்.

    மதுராந்தக உத்தம சோழர் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

    அப்போது அருண்மொழி இளவரசராக இருந்தான்.

    கி.பி.185ல் மதுராந்தக உத்தமசோழர் மறைந்த பிறகு சோழப் பேரரசனாக அருண்மொழி மணிமுடி சூடினான்.

    முடிசூட்டு விழாவின் போது "ராஜராஜ சோழன்" என்ற சிறப்பு பெயரைச் சூடிக்கொண்டான்.

    இளம் வயதிலேயே தாய், தந்தையரை இழந்த ராஜராஜன் தன் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியார், தமக்கை குந்தவை பிராட்டியார் ஆகியோர் அரவணைப்பில் பண்புடைய பெருமகனாக வளர்ந்தான்.

    ராஜராஜனுக்குப் பல மனைவியர் இருந்தனர்.

    இவர்களில் தந்திசக்தி விடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக விளங்கியவர்.

    மாமன்னனுக்கு வானவன் மாதேவியின் மூலம் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் என்னும் ராஜேந்திர சோழனாவான்.

    இவனுக்கு இரண்டு தங்கையர்கள் இருந்தனர். மூத்தவள் மாதேவி அடிகள், இளையவள் குந்தவை.

    ராஜராஜன் தன் பாட்டி செம்பியன் மாதேவியார் நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவி அடிகள் என்றும், சகோதரி குந்தவைப் பிராட்டியார் நினைவாக மற்றொரு பெண்னுக்கு குந்தவை என்று பெயரிட்டதோடு சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழர் நினைவாக மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தான்.

    மணிமுடி சூடிய ராஜராஜன் பல்லவர் ஆட்சியில் போர்களின் மிகுதியால் தமிழகத்தின் செல்வ வளங்கள் எல்லாம் சீரழிந்ததை உணர்ந்தான்.

    ஒரு நாடு செழிக்க வேண்டுமெனில் அந்நாடு போர்க்களமே காணாமல் இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து சோழநாட்டை சூழ்ந்த எல்லா நாடுகளுக்கும் தூதர்களை அனுப்பி நட்புக்கரம் நீட்டினான்.

    எதிர்த்தவர்களை வென்று அவர்களால் மேலும் போர் தொடராதவாறு தன் படைகளையும், தானைத்தலைவர்களையும் அந்நாடுகளில் நிலையாய் இருக்குமாறு செய்தான்.

    இதனால் சோழநாட்டிற்குள் போர் கிடையாது.

    செல்வ அழிவு கிடையாது.

    மாறாக பெருஞ்செல்வம் குவிந்தது. மக்கள் வாழ்க்கை அமைதியாக இருந்தது. கவின் கலைகள் வளர்ந்தன.

    சைவத்தின்பால் ஏற்பட்ட பற்று காரணமாக "சிவபாதசேகரன்" எனப் பட்டம் சூடி மகிழ்ந்தான்.

    • காலத்தால் மறக்க முடியாத கோவிலாக பெரிய கோவில் திகழ்ந்து வருகிறது.
    • இதனால் 1004-ல் தொடங்கிய பெரிய கோவில் கட்டுமான பணிகள் 1010-ல் முடிக்கப்பட்டது.

    மாமன்னன் ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெரிய கோவிலின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

    காலத்தால் மறக்க முடியாத கோவிலாக பெரிய கோவில் திகழ்ந்து வருகிறது.

    தஞ்சை நகரில் மலைப்பகுதிகளே இல்லாத போதிலும் பல்வேறு கட்ட மண் பரிசோதனையின் மூலம் செம்பாறாங்கல் என்னும் பாறைவகை பூமிக்கடியில் உள்ளதை சோழர் காலப் புவியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இவ்வாறு பூமிக்கு அடியில் இயற்கையாக அமைந்துள்ள செம்பாறாங்கல் தட்டுகள், பெரியகோவிலுக்கு இயற்கையானதும், உறுதியானதுமான ஒரு அஸ்திவாரத்தை ஏற்படுத்தி தரும் என்பதையும், கட்டுமானத்தின் முழு எடையையும் தாங்கும் வலிமையுடன் விளங்கும் என்பதையும் அழைத்துள்ளனர்.

    அதன் அடிப்படையிலேயே சோழர்கால ஸ்தபதிகள் முழுவதும் கற்பாலங்களைக் கொண்டு சிற்ப சாஸ்திர நூல்கள் வரையறுத்துள்ள அதிகபட்ச அளவு விகிதங்களை பின்பற்றி மிக உயரமானதாகவும், பிரம்மாண்டமாகவும் பெரிய கோவிலை கட்ட தீர்மானித்தனர்.

    அதனால்தான் ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கும் அதிகமான எடையும், 216 அடி உயரமும் கொண்ட முற்றிலும் கருங்கல்லால் ஆன விமானத்தை அமைத்திட 4 முதல் 6 அடி அஸ்திவாரம் மட்டுமே பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் கிளை நதிகளும், வாய்க்கால்களும் பெரிய கோவில் கட்டும் பணிகளுக்கான கட்டுமான பொருட்களை மலைப்பகுதிகளில் இருந்து கோவில் வளாகம் வரை கொண்டு வந்து சேர்க்கும் நீர்வழிப் பாதைகளாக பயன்படுத்தப்பட்டன.

    இதனால் 1004-ம் ஆண்டு தொடங்கிய பெரிய கோவில் கட்டுமான பணிகள் 1010-ல் முடிக்கப்பட்டது.

    மலைகள் இல்லாத தஞ்சையில் மாபெரும் கற்கோவிலாக தஞ்சை பெரிய கோவில் விளங்குவது எவ்வளவு பெரிய ஆச்சரியம், அதிசயம்.

    மாமன்னன் ராஜராஜசோழனின் கலை வண்ணத்தில் உருவான பெரிய கோவில் காலமெல்லாம் அவர் புகழ் பரப்பும் கருங்கல் காவியமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ×