search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai rain"

    • சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.
    • இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார்.

    பருவமழை தாமதமாகிய நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

    குறிப்பாக, மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அந்தேரி தகிசர் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் கோவண்டி, சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.

    அப்போது அவர்கள் தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் சாக்கடையில் விழுந்த 2 பேரையும் மீட்டு ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் 2 பேரும் ஏற்கனவே பலியானது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தனியார் ஒப்பந்த தொழிலாளர் ராம்கிருஷ்ணா (25), சுதீர் தாஸ் (30) என்பது தெரியவந்தது.

    இந்நிலையில், வடிகாலில் மூழ்கி இரண்டு தொழிலாளர்கள் இறந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காத தொழிலாளர் ஒப்பந்ததாரர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்தநிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    சயான், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இன்று காலையில் மழை பெய்ததால் தொடர்ந்து வெள்ளம் தேங்கியபடி இருந்தது.

    ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் தவித்தனர். ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன.

    தானே, நவி மும்பை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்தது. கடுமையான மழை காரணமாக பேரிடர் மீட்பு குழு மும்பை வாப் மீட்பு பணியில் ஈடுபட்டது. தாழ்வான பகுதியில் இருந்த மக்களை 5 குழுக்கள் மீட்டு வருகிறது.

    மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு விசாரணையின் போது, டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் எம்.பி. லோகூர், தீபக்குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியது. அதில் தலைநகர் டெல்லியில் மலைபோல குப்பை மேடுகள் உள்ளது. அதை அகற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது? டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது.

    ஆனால் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இதில் கோர்ட்டு தலையீடும் போது எங்கள் நடவடிக்கைகளுக்காக நாங்கள் விமர்சனத்துக்கு ஆளாகி தாக்கப்படுகிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.



    அத்துடன் திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும் அதற்கு பதில் அளிக்காத 10 மாநிலங்களுக்கு நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.

    திடக்கழிவு மேலாண்மை கொள்கைகள் கேள்விக்குறியாகி இருப்பதால் டெல்லியிலும் மும்பையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.#SC
    மும்பையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். #MumbaiRains #MHRains
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.

    நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் சுமார் 2000 பயணிகள் மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் ஆளுயரத்திற்கு மழை நீர் தேங்கியிருப்பதால் அந்த ரெயில் நிலையங்களில் சிக்கியிருக்கும் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.



    இதையடுத்து மேற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த ரெயில் நிலையங்களுக்கு கடற்படை வீரர்கள் இன்று காலையில் விரைந்தனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் கடந்து செல்லக்கூடிய மிக உயரமான வாகனங்களில் வந்த அவர்கள், பயணிகளை மீட்கும் பணியை தொடங்கி உள்ளனர். #MumbaiRains #MHRains
    அடைமழை கொட்டுவதால் 5-வது நாளாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மராட்டிய மாநிலத்தில் மழைக்கு 7 பேர் இறந்தனர்.
    மும்பை:

    மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக மழை கொட்டுகிறது. கனமழையால் மும்பை பெருநகரம் மற்றும் தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி உள்பட பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 66 பேர் சிக்கி இருந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.



    சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நேற்றும் சாலை, ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கியது.

    மின்சார ரெயில் சேவை மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே பல நீண்டதூர ரெயில் சேவைகளை ரத்து செய்தன. சில ரெயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன.

    மோசமான வானிலை காரணமாக 407 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று மும்பையை புயல் தாக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்த மும்பை மாநகராட்சி, இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

    இதனிடையே இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை போல மீண்டும் ஒரு பாதிப்பை மும்பை பெருநகரம் சந்திக்குமோ என்ற அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    கனமழை காரணமாக நல்லசோப்ரா-வசாய் ரெயில் நிலையங்கள் இடையே தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியில் சதாப்தி, வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிக்கி கொண்டன. இதனால் இரு ரெயில்களிலும் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று படகுகள் மூலம் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதேபோல் பால்கர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.

    மராட்டிய மாநிலத்தில் மழைக்கு யவத்மால் மாவட்டத்தில் 4 பேரும், தானே, பால்கர் மாவட்டத்தில் தலா ஒருவரும், மும்பை பெருநகரில் ஒருவரும் இறந்தனர். மாநிலம் முழுவதும் மழைக்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர். 
    பலத்த மழை காரணமாக இன்று காலை மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
    மும்பை:

    மும்பையில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றிரவும் மும்பையில் பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    பலத்த மழை காரணமாக மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று காலை 7.30 மணிக்கு அந்த பாலம் இடிந்தது.

    பாலத்தின் ஒரு பகுதி ரெயில் தண்டவாளங்கள் மீது விழுந்தது. அந்த சமயத்தில் ரெயில்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது.

    பாலம் இடிந்ததில் அந்த பகுதியில் நின்றவர்களில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தண்டவாளத்தின் மத்தியில் பாலம் விழுந்ததால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு ஒரு வழித்தடத்தில் ரெயில் சேவை முடங்கியது. இது லட்சக்கணக்கான பயணிகளை தவிக்க வைத்தது.


    இடிந்து விழுந்த கோகலே சாலை பாலம்தான் மேற்கு அந்தேரியையும் கிழக்கு அந்தேரியையும் இணைக்கும் பாலமாக திகழ்ந்தது. பாலம் இடிந்ததால் அந்தேரிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலம் வழியாகத் தான் டப்பாவாலாக்கள் உணவு பாத்திரகளை எடுத்து செல்வார்கள். பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு அவர்கள் சேவை தான் முக்கியமானதாகும்.

    இணைப்பு பாலம் இடிந்ததால் டப்பாவாலாக்கள் தங்கள் சேவையை இன்று நிறுத்தியுள்ளனர். #MumbaiRain
    மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. மும்பையில் விடாமல் பலத்த மழை பெய்து தாழ்வான பகுதிகள் தத்தளிப்பதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #MumbaiRain
    மும்பை:

    கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று காலை 11.30 மணிக்கு மராட்டிய மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மராட்டியம் மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்து அங்கு தீவிரமாக மழை கொட்டியது.

    மும்பை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புறநகர் ரெயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றன. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    இன்று தென்மேற்கு பருவமழை மும்பையை தாக்கும். மித மிஞ்சிய அளவில் மழை கொட்டும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


    அதன்படி இன்று காலை முதல் மும்பையில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரெயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மழை மிதமிஞ்சிய அளவில் பெய்யும். 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மும்பையில் மக்கள் இன்றும், நாளையும் வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.


    மோசமான வானிலை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்த 2 விமானங்கள் ஆமதாபாத் நகருக்கு திருப்பி விடப்பட்டன.

    மும்பை வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #MumbaiRain
    ×