search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mentor"

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AjitWadekar #SachinTendulkar
    மும்பை:

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இடக்கை பேட்ஸ்மேனான வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி ஒரு சதம், 14 அரைசதம் உள்பட 2,113 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 16 டெஸ்டுகளில் பங்கேற்று 4-ல் வெற்றியும், 8-ல் டிராவும், 4-ல் தோல்வியும் கண்டது. அவரது தலைமையிலான இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை (இரண்டு தொடரிலும் 1-0 என்ற கணக்கில்) வென்று புதிய வரலாறு படைத்தது. இந்திய ஒரு நாள் போட்டி அணியின் முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவரும் இவர் தான். ஆனால் வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.


    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பயிற்சியின் போது மறைந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.



    1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெறும் 42 ரன்னில் சுருண்டது. இந்த நாள் வரைக்கும் இந்திய அணியின் மோசமான ஸ்கோராக அது தான் இருந்து வருகிறது. இதனால் கேப்டன் பதவியை இழந்தார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.

    ஓய்வுக்கு பிறகு வங்கியில் பணியாற்றிய அஜித் வடேகர், அதன் பிறகு அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கு 1992-ம் ஆண்டு மேலாளர்-பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். தேர்வு குழு தலைவராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

    1994-ம் ஆண்டு நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் போது சச்சின் தெண்டுல்கர் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கினார். அதற்கு அப்போதைய பயிற்சியாளர் அஜித் வடேகரே முக்கிய காரணமாகும். தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய பிறகே கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளை படைத்தார்.

    இதே போல் 1990-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 1992-93-ம் ஆண்டில் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அப்போது பயிற்சியாளராக இருந்தவர் வடேகர். அதன் பிறகு கும்பிளே தொடர்ந்து 16 ஆண்டுகள் விளையாடினார்.

    வடேகரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போல் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சச்சின் தெண்டுல்கர்: வடேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 1990-களில் எங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் நாங்கள் எப்போதும் நன்றிக்குரியவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் துயரத்தை தாங்கும் மனவலிமையுடன் இருப்பதற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    சுனில் கவாஸ்கர்: ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக நான் அறிமுகம் ஆன போது எனது முதல் கேப்டனாக வடேகர் இருந்தார். இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் அடியெடுத்த போது கேப்டனாக அவர் தான் இருந்தார். என்னை பொறுத்தவரை அவர் தான் எனக்கு எப்போதும் கேப்டன். உலகை விட்டு மறைந்து விட்டாலும் எனக்குள் அவர் எப்போதும் இருப்பார்.

    அசாருதீன்: வடேகர் ஒரு அடையாள சின்னம். அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    சவுரவ் கங்குலி: அவரை நான் மிகவும் தவற விடுகிறேன். என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இது எனக்கு சோகமான நாள்.

    கும்பிளே: இந்திய அணிக்கு பயிற்சியாளர் என்பதையும் தாண்டி ஒரு அப்பா போன்று எங்களை வழிநடத்தினார். வியூகங்களை தீட்டுவதில் சாதுர்யமானவர். என் திறமை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    பிஷன்சிங் பெடி: இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர், ஒரு உள்நாட்டு தொடர் என்று தொடர்ந்து மூன்று தொடர்களை வென்றுத்தந்த முதல் இந்திய கேப்டன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் மீது அளப்பரிய மதிப்பு உண்டு.

    ஷேவாக்: கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழு தலைவர் என்று மூன்று பணிகளையும் கவனித்த அபூர்வமான ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர். அவரது மறைவுக்கு எனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.

    ரவிசாஸ்திரி (இந்திய பயிற்சியாளர்): இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனை இழந்து விட்டோம். இந்திய கிரிக்கெட்டுக்கு இது துயரமான தருணமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #AjitWadekar #SachinTendulkar
    ×