

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.
இந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது 8-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக கொல்கத்தா அணி கேப்டன் ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நடத்தை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த அபராதமானது, இந்த சீசனில் கொல்கத்தா அணியின் முதல் விதிமீறலாக அமைந்ததால், இந்த அபராதமானது கேப்டனுக்கு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத கொல்கத்தா அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுவதால் ரகானே மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.