

19-வது ஐ.பி.எல். தொடர் வரும் 28-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் பென் டக்கெட் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் அவர் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்டை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இதுதொடர்பாக பென் டக்கெட் கூறுகையில், சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது, இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். அதைச் செய்வதற்கு, கோடை காலத்திற்கு முன் உடல் ரீதியாக, மன ரீதியாக சிறந்த நிலையில் இருப்பதை நான் உறுதிசெய்ய வேண்டும். டெல்லியில் உள்ள அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது இந்த முடிவு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு இடையூறுக்கும் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதி. அதன்படி, பென் டக்கெட் அடுத்த இரு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் இதுபோல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது நினைவிருக்கலாம்.