2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.
2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
Published on

சிம்மம்

வெற்றி கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனபாரம் குறையும். தலைக்கு வந்த பிரச்சினைகள், தலைப்பாகையோடு சென்று விடும் என்று உறுதியாக கூறலாம். புதன், சனி, செவ்வாய் ஆகிய 3 கிரகங்களும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாக்கு வன்மை பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.

பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைப்பேறு உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். 15.4.2026 அன்று காலை 9.37 மணி முதல் 17.4.2026 அன்று பகல் 12.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் சிலர் வேலை மாற்றம் செய்யலாம். அல்லது கொடுத்த பணியை திருப்திகரமாக முடிக்க முடியாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். முக்கிய பணியை திருப்திகரமாக செய்ய இயலாது. தமிழ் புத்தாண்டு அன்று உணவு தானம் வழங்கவும்.

கன்னி

நீச்சபங்க ராஜயோகமான வாரம். நீச்சம் பெற்ற ராசி அதிபதி புதன் 4,7-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார்.இது நீச்ச பங்க ராஜயோக அமைப்பாகும். நீண்ட கால கனவுகள், லட்சியங்கள் நிறைவேறும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கி யத்துவம் கொடுப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும்.

அடமான நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.சிலருக்கு புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். 17.4.2026 அன்று பகல் 12.02க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தேவையற்ற அலைச்சலால் அசதி, ஆரோக்கியத் தொல்லைகள் கூடும். எனவே உணவு கட்டுப்பாடு அவசியம். தமிழ் புத்தாண்டு அன்று கூழ் தானம் வழங்கவும்.

துலாம்

நினைத்த காரியங்கள் கை கூடிவரும் வாரம். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் நினைத்த அனைத்து செயல்களும் சித்தியாகும். எதையும் வரும் முன் அறிந்து செயல்படுவீர்கள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை மாற்றம் கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரம் அமையும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றி தீர்மானிப்பதில் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

புதிய கடன் மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக்கசப்பு உருவாகும். சக பணியாளர்களிடம் சகிப்புத் தன்மையுடன் பழக வேண்டும். ராசிக்கு குருப் பார்வை இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறது என்பதால் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.தமிழ் புத்தாண்டு அன்று மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

விருச்சிகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 6ம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.மனதின் வேகத்திற்கு ஏற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது.தேவையற்ற யோசனைகளால் கவலைகள் அதிகமாகும்.பு தியதாக சுய தொழில் துவங்கு பவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் செய்யலாம். அஷ்டமாதிபதி புதன் நீச்சபங்க ராஜயோகம் பெறுவதால் விபத்து கண்டம், சர்ஜரி, அவமானம் சார்ந்த பாதிப்புகள் வரலாம். அதிர்ஷ்டம் சற்று குறையும்.

மாணவர்கள் காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள்.எதிர்கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான். அசையாச் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது.சரியான நேரத்திற்கு உணவு அருந்தவும். தமிழ் புத்தாண்டு அன்று இனிப்பு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com