திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு

3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

கடைசி நாளான நேற்று முன்தினம் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, மலையப்பசாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, சத்தியபாமா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான சாமிகள், தாயார்களை ஒரே மேடையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

வசந்தோற்சவம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர். இதோடு 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி கவுதமி, தலைமை செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com