அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம், பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது

இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். 4-ந் தேதி மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது
பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பித்த போது எடுத்தபடம்.
பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பித்த போது எடுத்தபடம்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தக்காலிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மங்கள வாத்தியங்கள் முழங்க நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருள பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com