கடன் சுமை தீர்க்கும் ருண விமோசன கணபதி

பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும்.
கடன் சுமை தீர்க்கும் ருண விமோசன கணபதி
Published on

அருகம்புல் வழிபாடு ஆன்மிக வழிபாட்டில் தனிச் சிறப்பு பெற்றது. அதுவும் விநாயகரையும் அருகம்புல்லையும் பிரிக்கவே முடியாது எனலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானின் 54 அவதாரங்களில் 27 வது அவதாரமாக விளங்கும் 'ருண விமோசன கணபதி' தனிச் சிறப்பு பெற்றவர். ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடைபெறுவது. அதாவது நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்று பொருள்.

கடன் என்றால் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மட்டும் கிடையாது. நம் முன்னோர்களுக்கு நாம் செய்யத் தவறிய கடமைகளும் கடன் தான். அத்தகைய பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.

ருண விமோசன கணபதி எல்லா ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இவரை வழிபடுவதற்காக இவர் இருக்கும் ஆலயத்தை தேடிச் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டில் உள்ள விநாயகரையே வழிபடலாம் அல்லது அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.

கடன்சுமை தீர்க்கும் அருகம்புல் வழிபாடு:

விநாயகர் வழிபாடு செய்வதற்கு முதல் நாள் இரவு 16 அருகம்புல் எடுத்து அதுவும் நுனி உடையாமல் எடுத்து தயிரில் போட வேண்டும். அருகம்புல் கிடைக்காத சூழ்நிலையில் குறைந்தது 3 ஆவது இருக்க வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்ததும் குளித்து முடித்து பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும். பிறகு ஒவ்வொரு அருகம்புல்லாக எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் போது, "ஓம் ருண விமோசன கணபதியே போற்றி" என பாராயணம் செய்ய வேண்டும். நீங்கள் ஆலயத்திற்கு செல்ல விரும்பினால் விநாயகரை 3 முறை சுற்றி வலம் வந்து பின்னர் செல்லலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் செய்துவர உங்களை கடன் சுமையிலிருந்து ருண விமோசன கணபதி காத்தருள்வார் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com