காரடையான் நோன்பு-சம்பத்கௌரி விரதம்

இன்று காரடையான் நோன்பு விரதம்.பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.
காரடையான் நோன்பு-சம்பத்கௌரி விரதம்
Published on

இன்று காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம்.

எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும், பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

எந்த பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன், பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும்.

கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். `மாசிக்கயிறு பாசி படியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

 சம்பத்கௌரி விரதம்

முதலில் பங்குனி மாத பிறப்பு என்பதால், மாத பிறப்பு பூஜையை செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாட்களை ''கௌரி விரத நாள்கள்'' என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவதுதானே முக்கியமான நோக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com