சிவபெருமானைக் குறித்து தவம் செய்த குரு பகவான்

சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு உள்ளது.குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன
சிவபெருமானைக் குறித்து தவம் செய்த குரு பகவான்
Published on

குரு பகவான் ஆங்கிரஸ முனிவருக்கும், சித்ராதேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு. ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு மகன் ஒருவர் உண்டு. அவர் பெயர் பரத்வாஜர்.

குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியைக் கடக்க ஓராண்டு எடுத்துக் கொள்ளும் குரு பகவான் பன்னிரண்டு ராசிகளையும் கடக்கப் பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவைத் தொட்டு விட்டால் அன்றுதான் மகாமகம்.

குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.

காசிக்குச் சென்று குரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு உள்ளது.

குருவிற்கு பிருஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு. குரு பகவான் தமிழகத்தில் தென் குடித்திட்டை, பட்டி, திருச்செந்தூர் ஆகிய மூன்று ஸ்தலங்களுக்குச் சென்று ஈஸ்வரனை, பூஜித்துப் பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com