

கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் தோப்பு உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரருக்கு காராமணிக்குப்பத்தில் தோப்பு உற்சவம் நடந்தது.
இதற்காக பாடலீஸ்வரர், பெரியநாயகியுடன் காராமணிக்குப்பத்துக்கு வீதி உலாவாக சென்றார். தொடர்ந்து காராமணிக்குப்பம் குளம் அருகில் வன உற்சவம் என்கிற தோப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகியுடன் முக்கிய வீதிகளில் வீதி உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.