

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வீதியில் அமைந்துள்ள அறம்வளர் நாயகி சமேத ஸ்ரீ கயிலாயநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று நடந்த சித்திரை திருவிழாவில் ஸ்ரீ கயிலாயநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கயிலாயநாதர் மற்றும் விஷ்ணு உற்சவ சிலைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று தேரோட்டம் தொடங்கியது.
அப்போது தேரின் முன்பு சிவவாத்தியம், பரதநாட்டியம் மற்றும் சிவன் வேடம், அம்மன் வேடம் அணிந்து பக்தர்கள் நடனமாடி வீதி உலா வந்தனர். தேரை கோவில் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் பழைய பஸ் நிலையம், மண்டி வீதி, பெரியகடை வீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வடம்பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதையொட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.