நோய்களை தீர்க்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்
Published on

தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவன் கோவில்களில், 258-வது தேவாரத் தலமாக இது விளங்குகிறது. 5 நிலைகளுடன் அமைந்த இவ்வாலயத்தின் மூலவர் வீற்றிருக்கும் விமானத்திற்கு ‘சதுர்வஸ்தம்’ என்று பெயர்.ஒரு முறை அபயதீட்சிதர் என்ற பக்தர், இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.

அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால், இறைவனின் முதுகுப்பகுதியைத்தான் தரிசிக்க முடிந்தது. “இறைவா.. உன் முகம் காட்டு’ என்று அவர் வேண்டியதன் பேரில், இறைவன் மேற்கு முகமாக திரும்பி தன் முக தரிசனத்தை வழங்கினார். இதனால் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்கிறார்.கோவில் பிரகாரத்தில் அகத்தியருக்கும், வால்மீகிக்கும், சிவபெருமான் காட்சி கொடுத்த வன்னிமரம் உள்ளது.

தினமும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்பட்ட பிறகே, இத்தல இறைவனான மருந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்யப்படும்.அகத்தியர் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்த ஈசன், உலகில் தோன்றியுள்ள நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகளையும், மருந்துகளை தயார் செய்வதற்கான மூலிகைகளையும் பற்றி உபதேசித்தார்.

எனவேதான் இத்தல இறைவன் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம், பாவங்களும் தீரும். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும்.

சென்னை அடுத்த திருவான்மியூரில் அமைந்துள்ளது, மருந்தீஸ்வரர் திருக்கோவில்.

இத்தல மூலவரான மருந்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் போன்ற பெயர்களும் உண்டு. உற்சவர் திருநாமம், ‘தியாகராஜர்’ என்பதாகும்.

கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் இறைவன் காட்சி கொடுத்தார். இதனால் இந்த ஊர் ‘திருவான்மீகியூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘திருவான்மியூர்’ ஆனது.

இவ்வாலயத்தில் திரிபுரசுந்தரி அம்மன், நடராஜர், அருணகிரியாரால் பாடப்பட்ட முத்துக்குமாரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்ச லிங்கங்கள் ஆகிய தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com