

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் பெருமளவில் வந்திருப்பதால் தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு படிப்படியாக தரிசனம் வழங்கி வருகின்றனர். நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வந்ததால் காத்திருப்பு அறைகள் மற்றும் நாராயணகிரி அறைகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் சுற்றுச்சாலையை கடந்து சீலா தோரணம், பாட்டா கங்கம்மா கோவில், கோகர்பம் நீர்த்தேக்கம் வழியாக சென்று 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பச்சி கல்வ கங்கம்மா கோவில் வரை நீண்டுள்ளது.
நாள் முழுவதும் இடைவிடாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்ய முடிகிறது.
பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால் சாலையோரங்களில் தங்கி உள்ளனர். வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், காபி, டீ உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பக்தர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்வதற்காக நடமாடும் சேவை வழங்கப்பட்டு வருகின்றன.
தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா மற்றும் லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். இதனால் தரிசன டோக்கன் உள்ள பக்தர்களுக்கு மட்டும் லட்டு வழங்கப்பட்டது.
தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
கடந்த 5 நாட்களில் மட்டும் 4,32,213 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.