

இறைவன் அருளியதைத் திருவுளங் கொண்டுமகிழ்ந்த அம்மை, திருக்கயிலையை விட்டு நீங்கினாள். கன்னியர் எழுவரும் துணையாகச் சூழப் பூவுலகத்தே, கயிலைக்குத் தென்பால் உள்ள புட்கரம், துண்டுலி, கண்ணுவாச்சிரமம், வாரணாசி, மகாகாளம், ரேணுகாஷேத்திரம், ராமசேது, மாயூரம், திருமுதுகுன்றம் முதலான தலங்கள் பலவற்றையும் அடைந்து பரமனைத்துதித்தாள்.
பாடல் வனம் வந்தடைந்த தேவி, பாடல் நாதனைப்பரவித் துதிக்கும் முனிவர்கள், அந்தணர் கூட்டங்களோடு முதலான பறவைகளும் பரமனைப் பாடிப் பரவுவதைக்கண்டாள். எங்கெங்கும், வெண்ணீற்றொளியும், அந்தணர்வேள்வித் தீயின் ஒளியுமே கண்டாள். கெடில நதி,பெண்ணை ஆறு, பாலோடை முதலியவற்றில் நீராடிவழக்கம் போல் இறைவனைப் பூசித்து வலம் வந்தாள்.
வலம் வரும் போது இடது கண்ணும், இடது தோளும்துடித்தன. முன், கயிலையில் இறைவன் அருளியவாறுதனக்குத் தவம்புரிய ஏற்ற இடம் இதுவேயென அறிந்தாள். தேவி, உண்ணா நோன்பினை மேற்கொண்டுஉள்ளம் உருகத் தோத்திரம் செய்யத்துவங்கினாள். தனக்குத் திருவருளால் இடம் காட்டி ஆட் கொண்ட தன்மையை வியந்து போற்றினாள்.
இறைவனை உமையம்மை நாள்தோறும் நியமத்தோடு நீராடிப்பூசித்து, இறைவனுக்கு வடபால் தவம் மேற்கொண்டாள். நாள்தோறும் பூஜை புரிவதற்கு வேண்டும் பொருட்களைச்சேடியர் அமைத்துக் கொடுப்பார்கள். பாதிரி மரம்தெய்வத்தன்மை பொருந்தியது, ஆதலால் அன்னையின்பூஜைக்கு வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் தந்தது.
பலவகைப் பூக்களையும் தந்தது. தவம் புரியுங்கால், உணவின்றி பாதங்கள் நிலத்தில் பதியாமல், வாயு உருவந்தாங்கி, அருமைத்திருக்குழந்தையாம் முருகனும் தேடிக் காண இயலாதஅருவத் திருமேனியுடன் அன்னை தவம் புரிந்தாள்.
அன்னை பூஜை புரியுங்கால், யாவற்றையும் சேகரித்துக் கொண்டு முறைப்படி அபிஷேகம் செய்து, திருவொற்றாடை சாத்தி, திருநீறிட்டு, திருஆடை சாத்தி, திருமாலை, திருவாபரணங்களைச் சூட்டி மந்திரங்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி மகா நிவேதனம் செய்துபோற்றித் துதித்து வழிபட்டு வந்தாள். பூஜை முடிந்த பின்னர், தக்கஅந்தணர்களுக்கும், அடியார்களுக்கும் அமுது ஊட்டிப் பெரு மகிழ்ச்சியுடன்பாதிரி மரத்தடியிலே அருவாய் தவம் மேற்கொண்டாள்.