

1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனைதலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.
நடுநாட்டு வைணவத்தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது. பரிக்கல்ஆ–லய கருவறைக்குள் ஸ்ரீவியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.
பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்குள் இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை என 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது. கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது. பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.
காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.
இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம். இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது. ஆந்திராவை சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே தெலுங்கு வருடப்பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் விரும்பினால் ரூ.1000 செலுத்தி ஒரு நாள் அன்னதானம் வழங்கலாம். இந்தியா–விலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர். திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது.
நரசிம்மரிடம் வேண்டிக்கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.
இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது. வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி உள்ளார்.
ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார். இத்தலத்தின் புராண கால பெயர் ‘‘பரகலா’’ என்பதாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.