

மயிலம் கோவிலில் மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும் சிரமம் இல்லாமல் ஏறும் விதமாக அமைந்திருக்கிறது. இது சிறப்பானது ஆகும். இந்த கோவிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த்தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது.
இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்து சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம். தைப்பூச விழாவின்போது பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பார்கள்.
அப்போது பக்திப் பெருக்கோடு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என தோளில் விதவிதமான காவடிகளைச் சுமந்தபடி நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பாடி மலையேறுவது கண்கொள்ளாக் காட்சி மலை உச்சியை அடைந்தால் ஒருபுறம் ராஜகோபுரம், இன்னொரு பக்கம் பெரிய மண்டபம் என கோவிலுக்குள் செல்ல 2 வழிகள் உள்ளன.
முருகனுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோவிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது. இதை ஒரு வேண்டுதலாகவே செய்கிறார்கள். இதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.