

இந்த கோவிலில் பெரியநாயகி அம்மையுடன் தோன்றா துணை நாதராக எழுந்தருளியுள்ளார் பாடலீஸ்வரர். இவ்வூர் இன்று கடலூர் என்று அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் தலைநகரமும் கடலூராகும். விழுப்புரம்- சிதம்பரம் செல்லும் ரெயில் பாதையில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் பாடலீஸ்வரர். இங்கு உள்ள அன்னை அருந்தவ நாயகியாய்த் தவம் இருந்து இறைவனை அடைந்த தாய்வரலாறு. அன்னை இங்கு பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். பாதிரி மரத்தின்கீழ்தான் இறைவனை அடையதவமிருந்தார். அன்னை தவமிருந்த பாதிரி மரம் இன்றும் இருக்கின்றது.
பாதிரிமரத்தின் மற்றொரு பெயர்பாடலம் ஆகும். அதனால்தான் இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பாடலீஸ்வரர் என்றுஅழைக்கப்படுகின்றார்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு அப்பர் அடிகளை உட்கார்ந்த நிலையில் தரிசிக்கலாம். மற்ற ஆலயங்களில் எல்லாம் அவர் நின்றநிலையில்தான் இருப்பார்.
மேலும் இந்த ஆலயத்தில் அப்பர் தம் திருக்கரங்களால் உழவாரப்பணி செய்ததால் அவர் கைப்பட்ட இடங்களில் எம் கால்படக் கூடாது என்று அஞ்சிய திருஞான சம்பந்தர். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலுக்குவெளியில் இருந்தே இறைவனையும், இறைவியையும்பாடியுள்ளார் அவர்நின்று பாடிய இடம் கோவிலுக்கு எதிரில் (தேர் அருகில்) சிறிய கோவிலாக உள்ளது.
இந்த கோவிலின் தலவிருட்சம் பாதிரிமரம். இங்கு இறைவனே சித்தராக வந்தார். இங்குள்ள இறைவனை அகத்தியர், புலிக்கால் முனிவர் என்றழைக்கப்படும் வியாக்கிரபாதர், மங்கள முனிவர் அருணகிரிநாதர் ஆகியோர் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.
இறைவன், இறைவி கோவில்கள் தனித்தனி கிழக்கு நோக்கிய கோவில்கள் ஆகும். வடக்கு நோக்கி சப்தமார்கள் (எழுவர்) கோவிலும் அம்பிகையின் கோவிலை அடுத்துள்ளது.
இக்கோவில் 5 திருச்சுற்றுகள் அமைந்தது ஆகும். ஐந்தாம் திருச்சுற்றுதான் ராஜ வீதி. இந்த ராஜ வீதியின் நான்கு மூலைகளிலும் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
இங்குள்ள இறைவனை வணங்க மாணிக்கவாசகர்வந்த போது கெடிலம் நதி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதாம் அவருக்காக இறைவன் கெடில நதியை மாற்றி கோவிலுக்குள் மாணிக்கவாசகர் வர வழிவிட்டதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.