search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குறித்து மேலிடக்குழு இன்று ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குறித்து மேலிடக்குழு இன்று ஆலோசனை

    • புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா-என்.ஆர். காங்கிரஸ், கூட்டணியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்த உள்ளது.

    அதுபோல, காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. தமிழகத்தை பின்பற்றி அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுடன் 3-வது அணியாக களம் இறங்க உள்ளது.

    காங்கிரஸ்., கட்சியை பொறுத்தவரை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ்., தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் பலரும் சீட் கேட்கின்றனர்.

    இந்நிலையில், வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு குழுவின் தலைவர் ஹரிஷ் சவுத்ரி நேற்று புதுச்சேரி வந்துள்ளார்.

    அவரை தொடர்ந்து, புதுச்சேரிக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமாரும் இன்று புதுச்சேரிக்கு வருகிறார்.பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் அஜோய்குமார் முதன் முதலாக புதுச்சேரிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் அஜோய்குமார், ஹரிஷ்சவுத்ரி ஆகியோர், வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கின்றனர்.

    இதனால் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

    தங்களுக்கு சீட் கேட்டு வலியுறுத்த திட்டமிட்டுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் தி.மு.க., காங்கிரசார் இடையே கருத்து சர்ச்சையால் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட குழு விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×