Iran War | தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி லாரிஜானி கொலைக்கு பழித்தீர்ப்போம்- ஈரான் சூளுரை

Ali Larijani
Ali Larijani
Published on

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இதை ஈரானும் உறுதிப்படுத்தியது.

அதேபோல் ஈரான் புரட்சிகர காவல்படையின் துணை அமைப்பான பசிஜ் படை தலைவர் கோலம்ரேசா சுலைமானியும் கொல்லப்பட்டார். ஏற்கனவே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்ட நிலையில் மூத்த அதிகாரியான அலி லாரிஜானி கொல்லப்பட்டது ஈரானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்புக் கொள்கையில் முக்கிய நபராக விளங்கிய அலி லாரிஜானி அரசியல் தலைமை, ராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதில் செயல்பட்டு வந்தார். போர்க்காலத்தில் வியூகங்களும் வகுத்து கொடுத்தார்.

இதற்கிடையே அலி லாரி ஜானி கொலைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹதாமி கூறும்போது,"அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரானின் பதில் எதிரிகளுக்கு தீர்க்கமானதாகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். இந்த உயரிய தியாகியின் ரத்தத்திற்கும், பிற மதிப்பிற்குரிய தியாகிகளின் ரத்தத்திற்கும் பழிவாங்கப்படும்" என்றார்.

அதேபோல் மற்றொரு ராணுவ தளபதி அலி அப்துல்லாஹி கூறிகையில்,” அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்கள் ஆச்சரியங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். ஆயுதப் படைகளின் பதில் நடவடிக்கை எதிரியின் செயல்பாடுகளையும் கற்பனையையும் விடப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். எதிரி சரணடையும் வரை இந்தப் பாதை தொடரும்” என்றார்.

இந்தநிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது:-

ஈரான் அரசு என்பது நன்கு நிறுவப்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

தாக்குதல்களில் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், எங்களது அரசியல் அமைப்பைச் சீர் குலைக்க முடியாது. நாட்டின் ஆட்சி முறையானது தனிநபர்களைச் சார்ந்திருக்காமல், வலுவான நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அலி லாரி ஜானி கொலையையடுத்து இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிகபட்ச சேதத்தை விளைவிக்கவும், இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்த்து செல்லவும் வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்தது.

இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை கூறும்போது,”லாரி ஜானியின் வீரமரணத்திற்குப் பழிவாங்கும் விதமாக பல்முனைக் குண்டுவீச்சு கொண்ட கோர்ரம்ஷார்-4 மற்றும் கத்ர் ஏவுகணைகள், இமாத் மற்றும் கைபர் ஷெக்கான் எறிகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்தது.

இஸ்ரேலின் மத்திய நகரமான காப்ர் காகெமில் 4 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ஏவுகணை மூலம் கொத்து குண்டுகளை வீசிய தாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள் மற்றும் கடும் சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. அதேபோல் தெற்கு இஸ்ரேல் பகுதி மீதும் ஏவுகணை வீசப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com