நிலநடுக்கப் பேரழிவு: வெனிசுலாவில் ரூ.95,000 கோடி இழப்பு!

இந்த கோர விபத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Venezuela Earthquake
Published on

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 அன்று ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டைச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.

ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கங்கள், வெனிசுலாவின் தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை முற்றிலும் உருக்குலைத்துள்ளன. 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.

இந்த இயற்கை பேரிடரால் வெனிசுலா நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நேரடிப் பொருளாதார இழப்பு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 95,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் தாண்டும் என சர்வதேச பேரிடர் மற்றும் அபாயக் கணிப்பு தொழில்நுட்ப நிறுவனமான 'வெரிஸ்க்' தனது தற்போதைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐநா சபையின் சர்வதேச வளர்ச்சி அமைப்பான UNDP வெளியிட்டுள்ள முதற்கட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்த சேத மதிப்பு வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 சதவீதத்திற்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் கடலோர மாநிலமான லா குவைராவில் மட்டும் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த கோர விபத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் ராணுவ உதவியுடன் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கப் பாதிப்பால் சுமார் 86 லட்சம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவில் ஏற்கனவே நிலவி வரும் கடுமையான பணவீக்கம், பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக, காப்பீட்டுத் தொகைகளை வழங்குவதிலும் உள்கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெரும் சவால்களும் சுணக்கமும் ஏற்பட்டுள்ளன.

இந்த பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், உலக வங்கி, ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் பல்வேறு நாடுகளும் வெனிசுலாவிற்கு அவசர நிதியுதவிகளையும், மீட்புக் குழுவினரையும் அனுப்பி உதவி வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com