

அமெரிக்க படைகளுடன் இணைந்து வார இறுதியில் நடத்திய கூட்டு வான்வழி தாக்குதல்களில், நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்த 175 ஜிஹாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் அந்த அமைப்பின் உலகளாவிய இரண்டாம் நிலைத் தலைவரும் அடங்குவதாகவும் நைஜீரிய ராணுவம் தெரிவித்தது.
உலகின் 'மிகவும் தீவிரமான பயங்கரவாதி' என வர்ணிக்கப்பட்ட ஐ.எஸ். தலைவர் அபு-பிலால் அல்-மினுகியை, கடந்த வார இறுதியில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் அமெரிக்க மற்றும் நைஜீரிய ராணுவங்கள் கொன்றன.
சில நாட்களுக்கு முன்பு கூட்டு தாக்குதல்கள் தொடங்கிய நிலையில், மே 19-ஆம் தேதி நிலவரப்படி, 175 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் போர்க்களத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டு தாக்குதல்களின் விளைவாக, ஐசிஸ் அமைப்பின் சோதனை சாவடிகள், ஆயுத கிடங்குகள், தளவாட மையங்கள், இராணுவ உபகரணங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தக்கவைக்க பயன்படுத்தப்படும் நிதி வலையமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன," என்று நைஜீரிய ராணும் கூறியது.
நைஜீரிய ராணுவம் மற்றும் அமெரிக்க ஆப்பிரிக்கா கட்டளைப் பிரிவு (AFRICOM) ஆகியவற்றின்படி, ஐ.எஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளின் இயக்குநராக, கொல்லப்பட்ட அல்-மினூகி ஊடக மற்றும் நிதி செயல்பாடுகள் குறித்தும், ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் டிரோன்களின் உருவாக்கம் மற்றும் உற்பத்தி குறித்தும் மூலோபாய வழிகாட்டுதலை வழங்கினார்.
நைஜீரியா, போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் பிராந்திய கிளைகளான, குறிப்பாக இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்க மாகாணம் (ISWAP) உள்ளிட்ட ஜிஹாதி கிளர்ச்சியாளர்களுடன் நீண்ட காலமாக போராடி வருகிறது.
உலகளாவிய மோதல் கண்காணிப்பு அமைப்பான ACLED-இன் சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு ஆப்பிரிக்கா உலகின் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மிகவும் சுறுசுறுப்பான மண்டலமாக மாறியுள்ளது. மேலும், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய அரசின் செயல்பாடு வரலாறு காணாத உச்சத்தை எட்டியதாகவும் அந்த அறிக்கை காட்டியுள்ளது.