

2022இல் தொடங்கிய உக்ரைன் - ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை.
உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைவது தங்கள் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் என கூறி ரஷியா இந்த போரை தொடங்கியது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷியாவுக்கு வட கொரியா, சீனா ஆகிய நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.
அவ்வப்போது ரஷியா - உக்ரைன் உள்கட்டமைப்புகளை குறிவைத்து பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன.
குறிப்பாக உக்ரைனின் நீண்ட தூரம் பயணிக்கும் டிரோன்கள், ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து வருகின்றன.
அந்த வகையில் நேற்று இரு ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வானதி டெலிகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
தகவலின்படி தெற்கு ரஷியாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனின் டிரோன் பாகங்கள் விழுந்ததில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த ஆலையின் சேதத்தால், கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷியாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார்.
மேலும் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் உள்ள யாரோஸ்லாவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ மற்றும் யாரோஸ்லாவ் இடையேயான முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ரஷியாவில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஒரு வாகனத்திற்கு தினசரி 50 லிட்டர் எரிபொருள் மட்டுமே வழங்கும் வகையில் ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிரிமியாவிலும் பொதுமக்களுக்கான பெட்ரோல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தீவிர போர் நடந்து வரும் சூழலில் ராணுவ வாகனங்களுக்கு எரிப்பொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதை ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிபர் புதின், தற்காலிக எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷியா அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் என்றும், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியை உடனடியாகப் பலமடங்கு அதிகரிப்போம் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.