

ஈரான் மீதான போரை நிறுத்துமாறு போப் ஆண்டவர் லியோ வலியுறுத்தினார். இதனால் போப் ஆண்டவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
அரசியல்வாதியாக இல்லாமல் போப் ஆண்டவராக அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறினார். மேலும் தன்னை இயேசுவாக சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில் இயேசுவைப் போன்ற தோற்றத்தில் உள்ள டிரம்ப், அற்புதத்தைச் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தார். மேலும் அந்த புகைப்படத்தில் அமெரிக்க கொடி, ராணுவ விமானங்கள் இருந்தன.
போப் ஆண்டவரை டிரம்ப் விமர்சித்ததற்கும், இயேசுவாக தன்னை சித்தரித்த படத்திற்கும் பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
அமெரிக்காவில் உள்ள மூத்த கத்தோலிக்கத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயேசு தன்னை சித்தரித்த புகைப்படத்தை டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார்.
அந்த புகைப்படம் குறித்து டிரம்ப் கூறும்போது, இயேசுவாக சித்தரித்த அந்த படம் என்னை ஒரு மருத்துவராகவே சித்தரிப்பதாகத் தான் கருதுகிறேன்.
அது செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் ஆதரிக்கும் ஒரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருடனும் தொடர்புடையது. அந்தப் படத்திற்குத் தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்றார்.