

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் இன்று 23வது நாளை எட்டியள்ளது.
உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
ஹார்முஸ் திறந்தே உள்ளது என்றும் எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு அதன் வழியே அனுமதி இல்லை என்றும் ஈரான் தெரிவித்தது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "அடுத்த 48 மணி நேரத்திற்குள், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, முழுமையாகத் திறந்துவிடாவிட்டால், அந்நாட்டின் பல்வேறு மின் நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; இதில், மிகப்பெரிய மின் நிலையமே முதலாவதாகத் தாக்கப்படும்!" என்று மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலளித்துள்ளது.
ஈரானின் எரிசக்தி அல்லது மின்சாரக் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான அல்லது அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட வணிக கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையத்தின் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.