

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இன்று (மே 16) மாலை 3:40 மணியளவில் பாங்காக்கில் அசோக் -தின்-டேங் சாலை ரெயில்வே கிராஸிங்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த சமயத்தில் ரெயில்வே கேட் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பல வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
அப்போது அதிவேகமாக வந்த ஒரு சரக்கு இரயில், அங்கு நின்றுகொண்டிருந்த ஆரஞ்சு நிறப் பேருந்தின் முன்பக்கத்தில் பலமாக மோதியுள்ளது.
ரெயில் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகிலிருந்த எக்ஸ்பிரஸ்வே மேம்பாலத் தூணில் மோதி, தீப்பற்றி எரியத் தொடங்கியது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி அருகருகே நின்றுகொண்டிருந்த சில கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வேகமாக பரவியது.
தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பேருந்திற்குள் 8 பேர் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.