

ஆபரேஷன் அக்சா ஃபிளட் என்ற பெயரில், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுத குழுக்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. மிக கொடூரமான தாக்குதலோடு, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளுக்குள் ஹமஸ் ஆயுதக்குழு நுழைந்து துப்பக்கிச்சூடு நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அரசும் தனது ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் துவங்கிவிட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துவிட்டது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில், காசா மற்றும் இஸ்ரேல் இடையேயான தடுப்பு வேலி தகர்க்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதோடு ரத்த காயங்களுடன் பெண் ஒருவரை ஹமஸ் பயங்கரவாதிகள் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹமஸ் தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து இருக்கிறது.