என் மலர்
உலகம்

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் மனைவிக்கு சிறை தண்டனை விதிப்பு!
- வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாக பெற்றார்.
- தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியாவில் 2022 முதல் 2025 ஏப்ரல் வரை அதிபராக இருந்தவர் யூன் சுக்-இயோல். இவரது மனைவி கிம் கியோன் ஹீ.
யூன் சுக்-இயோல் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிம் கியோன் ஹீ தென் கொரியாவின் முதல் பெண்பணியாக இருந்தார்.
2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், Unification Church என்ற அமைப்பிடமிருந்து வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அவர் லஞ்சமாகப் பெற்றதாக வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி, கிம் தனது பதவியைத் தனிப்பட்ட லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி 20 மாத சிறை தண்டனை விதித்தார். மேலும், 12.85 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வைர நெக்லசை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் ஏற்கனவே கடந்த ஆண்டு தென் கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.






