

ரஷியாவில், ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பெயரில் பீட்சா ஆர்டர் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தனது பெயருக்கு பதிலாக ஜேர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.
இது அதிகாரிகள் கவனத்துக்கு வந்துள்ளது. ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்திய வரலாறு ரஷியாவுக்கு உண்டு.
ரஷிய சட்டப்படி, நாஜிசத்தின் சின்னங்களையோ, பெயர்களையோ பொதுவெளியில் காட்சிப்படுத்துவதும் பரப்புவதும் மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
ஆனால் மாணவரின் இந்த விளையாட்டான செயலால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் 5 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்த தேச விரோதசெயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அந்த மாணவனை அவர் படித்து வரும் கல்லூரியில் இருந்தும் நிரந்தரமாக நீக்க நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.