

அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28 முதல் தாக்குதல் நடத்தியது. அதுமுதல் போரானது 4 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.
ஈரான், இந்த போரில் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எதிரிகளுக்கு பேரிடியாக அமைந்தது.
இதனால் இஸ்ரேலை மீறி அமெரிக்கா, ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதில் அணு ஆயுத தயாரிப்பை ஈரான் கைவிட்டால் அந்நாடு மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவதாக அமெரிக்கா வாக்களித்துள்ளது. இதற்கான 14 அம்ச இறுதிக்கப்ட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
இந்த சூழலில் இந்த ஒட்டுமொத்த போரில் ஈரானே வெற்றி பெற்றதாக 92 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜெருசலேம் பல்கலைக்கழகம் மற்றும் Agam Institute இணைந்து ஜூன் 17 முதல் 20 வரை இஸ்ரேலியர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 92.1 சதவீத இஸ்ரேலியர்கள், இந்தச் சண்டையில் ஈரானே வெற்றி பெற்றுள்ளது அல்லது அதிக பலன்களைப் பெற்றுள்ளது என்று திட்டவட்டமாக நம்புகின்றனர்.
குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வலதுசாரி ஆளும் கூட்டணியை சேர்ந்த 93.1 சதவீத பேரும் ஈரானே இதில் ஜெயித்துள்ளது என்றே கருதுகின்றனர்.
போரின் விளைவாக, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு முன்னெப்போதையும் விட மிகவும் பலவீனமடைந்துள்ளது என 82.9 சதவீத மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 63.2 சதவீத மக்கள் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த ஒப்பந்தம் ஈரானின் அணுசக்தி மற்றும் பிராந்திய ஆதிக்கத்தை சட்டப்பூர்வமாக்கிவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
போரைக் கையாண்ட விதம் மற்றும் லெபனான் விவகாரத்தில் பிரதமர் நேதன்யாகுவின் செல்வாக்கு இஸ்ரேல் மக்களிடையே கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சுமார் 56.4 சதவீத மக்கள் நேதன்யாகுவின் தலைமையே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
மீண்டும் பிரதமராவதற்கு கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நேதன்யாகுவிற்கு இருந்த 40.5 சதவீத மக்களின் ஆதரவு, தற்போது ஜூன் மாதத்தில் 29.4 சதவீதமாகக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்ற நேதன்யாகுவின் அறிக்கைகளை 75 சதவீத இஸ்ரேல் மக்கள் நம்ப மறுத்துள்ளனர்.