

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பத்து நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். கிட்டத்தட்ட பல தசாப்தங்களுக்கு பிறகு கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்தம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 முதல் அமலுக்கு வந்தது. இதை வரவேற்கும் வகையில் பெய்ரூட்டில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டு தலைவர்களை வெள்ளை மாளிகை வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் உயர்மட்ட அளவில் நேரில் சந்தித்து பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மிக ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், நிரந்த அமைதியை எட்ட துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினருக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய தாக்குதலை கண்டித்து, லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் ஏவுகணைகளை வீசி தாக்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே நடந்த மோதலில் லெபனானில் 172 குழந்தைகள், 260 பெண்கள் உள்பட 2196 பேர் உயிரிழந்தனர். மேலும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.