

ஈரான் எல்லையில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டனின் டியாகோ கார்சியா தீவை குறிவைத்து ஈரான் இடை நிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி உள்ளது.
இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்திருந்தது.
டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளம், மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களைக் கண்காணிப்பதில் அமெரிக்காவிற்கு உதவுகிறது.
இங்கிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய குண்டுவீச்சு விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைச் சமாளிக்கும் போர்க்கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
போர் தொடங்கிய சில நாட்களில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்ததில் 84 பேர் பலியானார்கள்.
இதற்கு பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது இந்திய பெருங்கடலில் அமைந்த்துள்ள இந்த தீவை ஈரான் தாக்கியுள்ளது.
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடந்த மாதம் அளித்த பேட்டியில், ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க விரும்புவதில்லை. எனவே எங்களது ஏவுகணைகளின் வரம்பை 2 ஆயிரம் கிலோமீட்டராக குறைத்துள்ளோம் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஈரான் குறிவைத்து உள்ளது. இதன் மூலம் ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ரகசியமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.