

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 18-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ஈரான் மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகளை ஈரான் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகப் பெரிய எண்ணெய் நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா எண்ணெய் தொழில் மண்டலத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் தீப்பிடித்து எரிகிறது.
தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு படையினர் போராடி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு புஜைரா எண்ணெய் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு எண்ணை உற்பத்தி பணி பாதிக்கப்பட்டு பின்னர் சீரானது.
இந்த நிலையில்தான் அந்த எண்ணெய் நிலையம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. அதே போல் துபாயிலும் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப் பட்டது.
அங்கு அதிகாலையில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வான்வெளியை மூடுவதாக தெரிவித்தது. சில மணி நேரத்துக்கு பிறகு வான்வெளியை திறப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன்-ஏவுகணை தாக்குதலில் தூதரக வளாகம் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே பாக்தாத்தின் ஜாதிரியா மாவட்டத்தில், ஈரானின் ஆதரவு பெற்ற குழுவின் தலைமையகம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள்.
ஈரான் மீது இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட பல நகரங்கள் மீது குண்டுவீசப்பட்டன. அதேநேரத்தில் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கிடையே இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது.