

சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், இந்த பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பர்கன்ஸ்டாக் ரெசார்ட்டில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் பிரதமர்களும் கலந்துகொண்டனர்.
ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய வான்ஸ்,
“கடந்த சில மணிநேரங்களிலேயே நாங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம், இனிவரும் நேரங்களிலும் கூடுதல் முன்னேற்றம் காண்போம் என எதிர்பார்க்கிறேன். லெபனானில் போர் நிறுத்தம் நீடிப்பதை உறுதி செய்வதில், கடந்த சில நாட்களில் நாங்கள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். இத்தகைய போர் நிறுத்தங்கள் எப்போதுமே சற்று சிக்கலானவைதான்.
பிராந்தியம் முழுவதும் ஒரு முழுமையான போர்நிறுத்தத்தைக் காண்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இப்போது நம் முன் உள்ள கேள்வி என்னவென்றால், நாம் இணைந்து இன்னும் எவ்வளவு சாதிக்க முடியும்? நம்மால் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க முடியுமா? மத்திய கிழக்கின் உறவுகளை நம்மால் நிரந்தரமாக மாற்ற முடியுமா? என்பதுதான்.
ஈரான் மக்களுடனான நமது உறவை மாற்றி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, உதவிக்கரம் நீட்டுமாறுதான் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் நான் வேறு யாரிடமும் பேசியதை விட ஃபீல்ட் மார்ஷல் முனிரிடம் (பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி) தான் அதிகமாகப் பேசியிருக்கிறேன்.” என தெரிவித்தார்.