ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: 2 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் தனது கட்டுப்பாட்டிலுள்ள பாதைகளை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Iran
Published on

ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் ஒரு எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அத்துடன் பல கப்பல்கள் சேதமடைந்தன.

ஈரான் தலைவர் ஆயதுல்லா அலி காமெனியின் இறுதிச் சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் "ஈரானுக்கு இறுதிச் சடங்கிற்காக ஒரு வாரம் விடுப்பு" என்று கிண்டலாகப் பேசினார்.

காலாவதியான பேச்சுவார்த்தை ஒப்பந்தம்:

இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. முன்னதாக கத்தார் உதவியுடன் இரு நாடுகளுக்கிடையே ஒரு வார போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அது காலாவதியானதும் ஈரான் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.

மீண்டும் போர் மூளுமா?

அமைதிக்கான பேச்சு வார்த்தையையும் போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கான முன்னடுப்பையும் இந்த தாக்குதல் முறியடித்து உள்ளது. இந்நிலையில் போர் மீண்டும் மூளும் சூழலை எண்ணி உலக நாடுகள் கவலையில் உள்ளது. முன்னதாக ஈரான் தனது கட்டுப்பாட்டிலுள்ள பாதைகளை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

எண்ணெய்க் கப்பலில் ஏவுகணை தாக்குதல்:

ஹார்முஸ் பகுதியில் ஒமானின் லிமா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த இரண்டு வர்த்தகக் கப்பல்கள் இந்த ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.

இதுகுறித்து ஐக்கிய ராஜ்ய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பலின் இடது பக்கத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதலில் அங்குள்ள யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு தென்பட்டால் UKMTO-க்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையில், சமீப நாட்களில் ஓமானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற மேலும் இரண்டு கப்பல்களை ஈரான் தாக்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

வர்த்தகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து ஆகியவை இந்த நீர்வழிப்பாதையின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. வளைகுடாவுக்கான ஒரு பரந்த அமைதிக் கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டும், ஒருவருக்கொருவர் அச்சுறுத்தல்களை பரிமாறிக்கொள்வதால், நிச்சயமற்ற நிலை இன்னும் நிலவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com