

சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு சீனா-வடகொரியா இடையிலான விமானப் போக்குவரத்து வருகிற 30-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சீனா, பீஜிங்கில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்குக்கு 30-ந்தேதி முதல் தனது சேவையைத் தொடங்க உள்ளது.
முதல்கட்டமாக வாரத்திற்கு ஒருமுறை என திங்கட்கிழமை தோறும் இந்த விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் அதிகரித்த பதட்டங்கள், உலக நாடுகளுடனான அதிபர் டிரம்ப்பின் வெளி யுறவு கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், சமீப காலமாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த வட கொரியா விரும்புகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
தற்போது விமான சேவையும் தொடங்க உள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.