என் மலர்
உலகம்

இந்தியாவுடன் பரஸ்பர உறவை வங்கதேசம் விரும்புகிறது - இடைக்கால அரசின் தலைவர் கடிதம்
- ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்காளதேச இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
- தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.
டாக்கா, ஜூன்.9-
வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதையடுத்து வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்தியா-வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்கதேசம் இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேசம் மக்களுக்கும், இடைக்கால அரசின் தலை வர் முகமது யூனுசுக்கும், பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஸ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.
வங்காளதேச இடைக் கால அரசின் எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இந்தியா, வங்காளதேசம் ஆகிய 2 நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.






