‘லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும்’ - பெஞ்சமின் நெதன்யாகு

ஹிஸ்புல்லா அமைப்பை நாங்கள் தொடர்ந்து தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
‘லெபனான்மீதான தாக்குதல்கள் தொடரும்’ - பெஞ்சமின் நெதன்யாகு
Published on

ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதுவும் கடந்த இரண்டு நாட்களாக லெபனான்மீது கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் லெபனான்மீதான தாக்குதல் தொடரும் என மீண்டும் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

"ஹிஸ்புல்லா அமைப்பை தொடர்ந்து வலிமையுடனும், துல்லியமாகவும், உறுதியுடனும் தாக்கி வருகிறோம்.

பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் நயீம் காசிமின் தனிச் செயலாளரும், அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவருமான அலி யூசுப் கர்ஷி என்பவரை கொன்றுவிட்டோம்.

நேற்றிரவு லெபனான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஐ.டி.எஃப் (இஸ்ரேலிய ராணுவப் படை) தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான ஆயுதங்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுதளங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வழிகள், அத்துடன் ஆயுதக் கிடங்குகள், ராக்கெட்டுகளை ஏவும் இடங்கள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகங்கள் ஆகியவற்றை அழித்தது.

இதுதான் எங்கள் முடிவு - இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எவராயினும் அவர்கள் தாக்கப்படுவார்கள். வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்யும் வரை, தேவையான இடங்களில் எல்லாம் ஹிஸ்புல்லா அமைப்பை நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com