

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் 26-வது நாளாக நீடித்து வரும் நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடர்ந்தது. தலைநகர் தெக்ரானில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கியதாக ஈரான் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஈரானின் அணுசக்தி அமைப்பு கூறும்போது, புஷேர் அணுமின் நிலைய வளாகத்திற்குள் ஒரு எறிபொருள் தாக்கியது. இந்தச் சம்பவத்தால் எந்தவொரு நிதி அல்லது தொழில்நுட்ப சேதமோ, அல்லது மனித உயிரிழப்போ ஏற்படவில்லை. மின் நிலையத்தின் பகுதிகள் சேதமடையவில்லை.
அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், பிராந்திய பாதுகாப்பிற்கும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தது.
ஏற்கனவே கடந்த 17-ந்தேதி புஷேர் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இஸ்ரேலை நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. அவைகளை தடுக்க இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன.