வேளச்சேரி, பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம் தகவல்

வேளச்சேரி - தோமையார் மலை பறக்கும் ரெயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #TNAssembly
வேளச்சேரி, பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம் தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று ஆலந்தூர் எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் பறக்கும் ரெயில் திட்டம் எப்போது முழுமை அடையும் என்றார். மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் திட்டத்தை 2006-ம் ஆண்டு கருணாநிதி தொடங்கி வைத்தார்.

அந்த விழாவில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 3 கி.மீ. தூரம் பறக்கும் ரெயில் திட்டத்தை நீட்டித்து தரப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் நடைபெற்றது. தடையாக இருந்த ஆதம்பாக்கம் பகுதியில் இருந்த 129 குடிசைகள் அப்புறப்படுத்தி வேலைகள் நடைபெற்றன.

இதில் 2½ கி.மீ. தூரத்துக்கு தி.மு.க. ஆட்சியில் பணிகள் முடிந்துவிட்டது. ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்கள் அமைக்காமல் 8 வருடமாக திட்டம் முடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் தென்னக ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில்களும் பரங்கிமலையில் ஒரே இடத்துக்கு வரும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். எனவே ½ கி.மீட்டர் தூர பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

வேளச்சேரி-புனித தோமையார் மலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 5½ கி.மீட்டர் தூரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் போடப்பட்டுவிட்டது. மீதமுள்ள 1½ கி.மீட்டர் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

நில உரிமையாளர்கள் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்ததால் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இப்போது விசாரணை முடிவுற்றுள்ளது. இறுதி தீர்ப்பு வந்தவுடன் மனுதாரர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கியதும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்’’ என்றார். #TNAssembly #OPanneerselvam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com