

லக்னோ மாநிலத்தில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
பிரதீப் சிங் என்ற நபர் 1000 ரூபாய் கொடுத்து ஒரு நபரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு, ஸ்டேடியத்திற்கு உள்ளே சென்றபோது, நுழைவுவாயிலில் இருந்த நபர்கள் டிக்கெட் பார்கோடை ஸ்கேன் செய்தபோது, அது போலி டிக்கெட் என தெரியவந்ததுள்ளது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 4 நபர்கள், சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், போலி டிக்கெட்டுகளை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர செளத்ரி, விஸ்வஜீத் சாஹு, ஸ்ரீகாந்த் போர்கார், நுதன் குமார் சாஹூ உள்ளிட்ட நான்கு நபர்களை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ரிட்ஸ் கார், 4 ஸ்மார்ட்போன், 1 லேப்டாப், 3 பேன் கார்டு, 4 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ஜி.எஸ்.எம் பேப்பர்களை போலீசார் கைப்பற்றினர்.