

சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்துப் பேசினார்.
நடப்பு அரசியல் விவகாரங்களையும் ரஜினி தொடங்க இருக்கும் கட்சி குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த செ.கு.தமிழரசன் ரஜினி மக்களுக்காக பணியாற்றுவதில் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.
தொடர்ந்து முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி வரும் ரஜினிகாந்தை, காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசர் இன்று காலை சந்தித்தார். நடப்பு அரசியல், 2021 சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கும், கூட்டணிகள் எப்படி அமையும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.
ரஜினியை சந்தித்த பின் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
‘இன்று எனது பேரன் சேஷசாயிக்கு முதல் பிறந்தநாள். ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
ரஜினிகாந்த் யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தில் இருப்பதாக நான் கருதவில்லை.
அவருடைய சினிமா அனுபவம், அரசியல் அனுபவம், பொதுவாழ்க்கை அனுபவம் எல்லாம் அவருக்கு இருக்கிறது. நான் ஆலோசனை சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு கிடையாது. எனவே நான் எந்த ஆலோசனையும் அவருக்கு சொல்லவில்லை.’
இவ்வாறு அவர் கூறினார்.