

இந்திய பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடைசியாக இத்தாலி சென்றடைந்தார். இத்தாலி சென்ற அவர், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மெலோடி (Melody) சாக்லெட் வழங்கினார். இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி- மெலோனிக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் மெலோனி செல்பி எடுத்துக் கொள்வார்.
இதனால் மெலோனி- மோடி ஆகிய பெயர்களை வைத்து மெலோடி சாக்லெட் பெயருடன் நெட்டிசன் இணைத்து பார்த்து வரும் நிலையில், இத்தாலி பிரதமர், “இந்திய பிரதமர் மோடி பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார்” என்றார்.
இந்த நிலையில், இந்தியாவில் இளைஞர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி மெலோடி சாக்லெட் சாப்பிடுவதில் பிசியாக உள்ளார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-
NEET தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. எரிவாயு விநியோகம் பற்றாக்குறையாக உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.
வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றால் இளைஞர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய சூழலிலும் இந்தியப் பிரதமர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் இணைந்து 'மெலோடி' (Melody) சாப்பிடுவதில் மும்முரமாக உள்ளார். இதுவே நாட்டின் உண்மையான நிலையாகும்.
இவ்வாறு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.