என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆரிய - பார்ப்பனியத்தின் அடிவருடி சீமான்.. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வன்னியரசு கண்டனம்
- ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும்.
- தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும்பலின் சதித்திட்டம்.
இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை விமர்சித்து விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தந்தை பெரியார் குறித்து மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் சீமான். நாதக தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார் ஒருவர் தான் புரட்சியாளர் என பேசிய சீமான். கட்சி ஆரம்பித்த பின் அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுக்க சமூகநீதி அரசியலின் மீட்பர்களாக இருப்பவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஆவார்கள். அதுமட்டுமல்லாது, பார்ப்பனீய- ஆரிய எதிர்ப்பு. அரசியலை வரலாற்றுத்தரவுகளோடு நிறுவியவர்களும் இவர்களே.
ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கி விட்டனர். அதனுடைய ஒரு பகுதி தான் சீமானை வைத்து தீவிரமாக்குகிறது RSS கும்பல்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும்பலின் சதித்திட்டம். அச்சதிக்கான அசைன்மென்ட் சீமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக தூற்றுகிறார்.
ஆரிய- பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.






