

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது.
இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் ஆளுநர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் த.வெ.க.வுக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முக்கிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
த.வெ.க. ஆதரவு கோரியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநர் அர்லேகரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளார்.