

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன் இன்று அதிகார்ப்பூர்வமாக அறிவித்தார்.
தி.மு.க. ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்க முன்வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் தமிழக மக்களின் நலன் சார்ந்த சமூக நீதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும், தி.மு.க தலைமை அவற்றை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தங்களை "யார் நீங்கள்?" என்ற ரீதியில் அவமதித்ததாகவும், தி.மு.க-வின் 'பெரிய அண்ணன்' போக்கினால் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பா.ஜ.க., த.வெ.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறுவதாக த.வா.க. முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
“தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறியதாக எங்களுக்கு இன்னும் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை.
பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வரத் தயார் என்று சொல்லியதாகத்தான் தகவல் வந்திருக்கிறது. என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.